சுந்தரமூர்த்தி சுவாமிகள் தேவாரம்
ஏழாம் திருமுறை
7.66 திருவாவடுதுறை
பண் - தக்கேசி
மறைய வனொரு மாணிவந் தடைய
    வார மாய்அவன் ஆருயிர் நிறுத்தக்
கறைகொள் வேலுடைக் காலனைக் காலாற்
    கடந்த காரணங் கண்டுகண் டடியேன்
இறைவன் எம்பெரு மானென்றெப் போதும்
    ஏத்தி ஏத்திநின் றஞ்சலி செய்துன்
அறைகொள் சேவடிக் கன்பொடும் அடைந்தேன்
    ஆவ டுதுறை ஆதிஎம் மானே.
1
தெருண்ட வாயிடை நூல்கொண்டு சிலந்தி
    சித்தி ரப்பந்தர் சிக்கென இயற்றச்
சுருண்ட செஞ்சடை யாயது தன்னைச்
    சோழன் ஆக்கிய தொடர்ச்சிகண் டடியேன்
புரண்டு வீழ்ந்துநின் பொன்மலர்ப் பாதம்
    போற்றி போற்றியென் றன்பொடு புலம்பி
அருண்டென் மேல்வினைக் கஞ்சிவந் தடைந்தேன்
    ஆவ டுதுறை ஆதிஎம் மானே.
2
திகழும் மாலவன் ஆயிரம் மலரால்
    ஏத்து வானொரு நீண்மலர் குறையப்
புகழி னாலவன் கண்ணிடந் திடலும்
    புரிந்து சக்கரங் கொடுத்தல்கண் டடியேன்
திகழும் நின்றிருப் பாதங்கள் பரவித்
    தேவ தேவநின் றிறம்பல பிதற்றி
அகழும் வல்வினைக் கஞ்சிவந் தடைந்தேன்
    ஆவ டுதுறை ஆதிஎம் மானே.
3
வீரத் தாலொரு வேடுவ னாகி
    விசைத்தோர் கேழலைத் துரந்துசென் றணைந்து
போரைத் தான்விச யன்றனக் கன்பாய்ப்
    புரிந்து வான்படை கொடுத்தல்கண் டடியேன்
வாரத் தாலுன நாமங்கள் பரவி
    வழிபட் டுன்றிற மேநினைந் துருகி
ஆர்வத் தோடும்வந் தடியிணை அடைந்தேன்
    ஆவ டுதுறை ஆதிஎம் மானே.
4
ஒக்க முப்புரம் ஓங்கெரி தூவ
    உன்னை உன்னிய மூவர்நின் சரணம்
புக்கு மற்றவர் பொன்னுல காளப்
    புகழி னாலருள் ஈந்தமை அறிந்து
மிக்க நின்கழ லேதொழு தரற்றி
    வேதி யாஆதி மூர்த்திநின் அரையில்
அக்க ணிந்தஎம் மானுனை அடைந்தேன்
    ஆவ டுதுறை ஆதிஎம் மானே.
5
இப்பதிகத்தில் ஆறாம் செய்யுள் சிதைந்து போயிற்று.
6
இப்பதிகத்தில் ஏழாம் செய்யுள் சிதைந்து போயிற்று.
7
இப்பதிகத்தில் எட்டாம் செய்யுள் சிதைந்து போயிற்று.
8
இப்பதிகத்தில் ஒன்பதாம் செய்யுள் சிதைந்து போயிற்று.
9
இப்பதிகத்தில் பத்தாம் செய்யுள் சிதைந்து போயிற்று.
10
திருச்சிற்றம்பலம்

சுந்தரமூர்த்தி சுவாமிகள் தேவாரம்
ஏழாம் திருமுறை
7.70 திருவாவடுதுறை
பண் - தக்கேசி
கங்கை வார்சடை யாய்கண நாதா
    கால காலனே காமனுக் கனலே
பொங்கு மாகடல் விடமிடற் றானே
    பூத நாதனே புண்ணியா புனிதா
செங்கண் மால்விடை யாய்தெளி தேனே
    தீர்த்த னேதிரு வாவடு துறையுள்
அங்க ணாஎனை அஞ்சலென் றருளாய்
    ஆரெ னக்குற வமரர்கள் ஏறே.
1
மண்ணின் மேல்மயங் கிக்கிடப் பேனை
    வலிய வந்தெனை ஆண்டுகொண் டானே
கண்ணி லேன்உடம் பில்லடு நோயாற்
    கருத்த ழிந்துனக் கேபொறை ஆனேன்
தெண்ணி லாஎறிக் குஞ்சடை யானே
    தேவ னேதிரு வாவடு துறையுள்
அண்ண லேயெனை அஞ்சலென் றருளாய்
    ஆரெ னக்குற வமரர்கள் ஏறே.
2
ஒப்பி லாமுலை யாளொரு பாகா
    உத்த மாமத்த மார்தரு சடையாய்
முப்பு ரங்களைத் தீவளைத் தங்கே
    மூவ ருக்கருள் செய்யவல் லானே
செப்ப ஆல்நிழற் கீழிருந் தருளுஞ்
    செல்வ னேதிரு வாவடு துறையுள்
அப்ப னேயெனை அஞ்சலென் றருளாய்
    ஆரெ னக்குற வமரர்கள் ஏறே.
3
கொதியி னால்வரு காளிதன் கோபங்
    குறைய ஆடிய கூத்துடை யானே
மதியி லேன்உடம் பில்லடு நோயால்
    மயங்கி னேன்மணி யேமண வாளா
விதியி னாலிமை யோர்தொழு தேத்தும்
    விகிர்த னேதிரு வாவடு துறையுள்
அதிக னேயெனை அஞ்சலென் றருளாய்
    ஆரெ னக்குற வமரர்கள் ஏறே.
4
வந்த வாளரக் கன்வலி தொலைத்து
    வாழும் நாள்கொடுத் தாய்வழி முதலே
வெந்த வெண்பொடி பூசவல் லானே
    வேட னாய்விச யற்கருள் புரிந்த
இந்து சேகர னேஇமை யோர்சீர்
    ஈச னேதிரு வாவடு துறையுள்
அந்தா ணாஎனை அஞ்சலென் றருளாய்
    ஆரெ னக்குற வமரர்கள் ஏறே.
5
குறைவி லாநிறை வேகுணக் குன்றே
    கூத்த னேகுழைக் காதுடை யானே
உறவி லேன்உனை அன்றிமற் றடியேன்
    ஒருபி ழைபொறுத் தால்இழி வுண்டே
சிறைவண் டார்பொழில் சூழ்திரு வாரூர்ச்
    செம்பொ னேதிரு வாவடு துறையுள்
அறவா னேயனை அஞ்சலென் றருளாய்
    ஆரெ னக்குற வமரர்கள் ஏறே.
6
வெய்ய மாகரி ஈருரி யானே
    வேங்கை ஆடையி னாய்விதி முதலே
மெய்ய னேஅடல் ஆழியன் றரிதான்
    வேண்ட நீகொடுத் தருள்புரி விகிர்தா
செய்ய மேனிய னேதிகழ் ஒளியே
    செங்க ணாதிரு வாவடு துறையுள்
ஐய னேயெனை அஞ்சலென் றருளாய்
    ஆரெ னக்குற வமரர்கள் ஏறே.
7
கோதி லாவமு தேஅருள் பெருகு
    கோல மேஇமை யோர்தொழு கோவே
பாதி மாதொரு கூறுடை யானே
    பசுப தீபர மாபர மேட்டீ
தீதி லாமலை யேதிரு வருள்சேர்
    சேவ காதிரு வாவடு துறையுள்
ஆதி யேயெனை அஞ்சலென் றருளாய்
    ஆரெ னக்குற வமரர்கள் ஏறே.
8
வான நாடனே வழித்துணை மருந்தே
    மாசி லாமணி யேமறைப் பொருளே
ஏன மாவெயி றாமையும் எலும்பும்
    ஈடு தாங்கிய மார்புடை யானே
தேனெய் பால்தயிர் ஆட்டுகந் தானே
    தேவ னேதிரு வாவடு துறையுள்
ஆனை யேயெனை அஞ்சலென் றருளாய்
    ஆரெ னக்குற வமரர்கள் ஏறே.
9
வெண்ட லைப்பிறை கொன்றையும் அரவும்
    வேரி மத்தமும் விரவிமுன் முடித்த
இண்டை மாமலர்ச் செஞ்சடை யானை
    ஈச னைத்திரு வாவடு துறையுள்
அண்ட வாணனைச் சிங்கடி யப்பன்
    அணுக்க வன்றொண்டன் ஆர்வத்தால் உரைத்த
தண்ட மிழ்மலர் பத்தும்வல் லார்கள்
    சாத லும்பிறப் பும்மறுப் பாரே.
10
 
11
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com